Wednesday 25 July 2012

குண்டும் குழியுமான சாலையால் இப்படி ஒரு வசதி: வலியால் துடித்த பெண்ணுக்கு சுகப் பிரசவம்


கோவை:கோவை அருகே, 108 ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு, வழியிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது.மதுக்கரை அடுத்த, சீரபாளையத்தைச் சேர்ந்தவர், சக்திவேல்; இவர் மனைவி, சுப்புலட்சுமி, 21. நிறைமாத கர்ப்பிணியான இவர், ரங்கசமுத்திரத்திலுள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம், கோவை அரசு மருத்துவமனைக்கு, மருத்துவ பரிசோதனைக்குச் சென்றார். ஒரு வாரம் கழித்து வருமாறு, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை, சுப்புலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அருகில் உடனடி வாகன வசதி ஏதும் இல்லாததால், 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு, தகவல் தெரிவித்தனர். மதுக்கரையிலிருந்து, ரங்கசமுத்திரம் சென்ற ஆம்புலன்சில், 8.50 மணிக்கு சுப்புலட்சுமியை ஏற்றி, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியில், 9.10 மணியளவில், குமிட்டிபதி அருகே செல்லும்போது, கடுமையான பிரசவ வலி ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் டிரைவர் பாலசுப்ரமணியன், வாகனத்தை சாலையோரத்திலேயே நிறுத்தினார். ஆம்புலன்சில் உடனிருந்த டெக்னீசியன் ஜோதி, சுப்புலட்சுமிக்கு, பிரசவம் பார்த்தார். அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து இருவரும், அரிசிபாளையத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.இருவரும் நலமாக உள்ளனர் என் டாக்டர்கள் தெரிவித்தனர்..

ரோடு மோசம்:சுப்புலட்சுமியின் கணவர் சக்திவேல் கூறுகையில், ரங்கசமுத்திலிருந்து, அரிசிபாளையத்துக்கு, குமிட்டிபதி வழியாகத் தான் செல்ல வேண்டும். இந்த ரோடு, குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. என் மனைவியை, ஆம்புலன்சில் ஏற்றி, 2 கி.மீ., தூரம் தான் வந்திருப்போம். கடுமையான வலி ஏற்பட்டு துடித்தார். ஆம்புலன்சில் இருந்த டெக்னீசியன், பிரசவம் பார்த்தார். நல்ல வேளையாக சுகப்பிரசவம் நடந்து, குழந்தையும் பிறந்தது, என்றார்.

ரங்கசமுத்திரம் ரோட்டை சீரமைக்கக்கோரி, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை இதற்கு முன் நடத்தியுள்ளனர். இதுவரை, ரோடு சீரமைக்கப்படவில்லை. அவசர சிகிச்சைக்காக செல்வோர், மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்நிலை தொடராமல் இருக்க, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment